Tuesday, 4 February 2014

7வது சம்பள கமிஷன் தலைவர் முன்னாள் நீதிபதி மாத்தூர்

புதுடெல்லி: ஏழாவது சம்பள கமிஷன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கமிஷன் அமைக்கப்படுகிறது. இதன்படி, 6வது சம்பள கமிஷன் கடந்த 2006ல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 7வது சம்பள கமிஷனை அமைப்பதற்கான அனுமதியை கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார்.

இந்நிலையில், இந்த கமிஷனின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கமிஷனின் முழு நேர உறுப்பினராக மத்திய எண்ணெய் துறை செயலாளர் விவேக் ரே, பகுதி நேர உறுப்பினராக ரத்தின் ராய், செயலாளராக மீனா அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை பிரதமர் நேற்று வழங்கினார். 


இந்த கமிஷன் 2 ஆண்டுகளில் பரிந்துரை அளிக்கும். அது, 2016ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த பரிந்துரையை சிறிய மாற்றங்களுடன் மாநில அரசுகளும் அமல்படுத்துவது வழக்கமான ஒன்று. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


எக்ஸ்ட்ரா தகவல்


ஐந்தாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் 1996ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதலும் நான்காவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் 1986ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதலும் அமல் படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment